புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்–நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்–நடிகையர் தப்பித்து வருகின்றனர் 2009 முதல் 2017 வரை!
“தினமலர்‘ செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது[1]: நடிகைகள் குறித்து வெளியான செய்தி தொடர்பாக, கடந்த 7ம் தேதி, அக்டோபர் 2009, “தினமலர்’ செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது செய்தனர். பின், நிபந்தனையற்ற ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, 7ம் தேதி நடிகர் சங்கத்தில் கூட்டப்பட்ட கண்டனக் கூட்டத்தில், பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பல நடிகர், நடிகையர் இழித்தும், பழித்தும் பேசியது வீடியோ ஆதாரம் மூலம் தெரியவந்தது. பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவாக பேசிய நடிகர், நடிகையர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏற்கனவே பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், நடிகர்களுக்கு எதிராக, சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 15-10-2009 அன்று எட்டு பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
பத்திரிகையாளர் அன்பழகனின் மனைவி கிருஷ்ணவேணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது[2]: “தினமலர்’ நாளிதழில் வந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் சங்கத்தின் சார்பில், சங்க வளாகத்தில், கடந்த 7ம் தேதி கண்டனக் கூட்டம் நடத்தப் பட்டது. அதில், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், விவேக், சத்யராஜ், சூர்யா, அருண்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர், பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும், அவர்களின் குடும்பத் தினருக்கு எதிராகவும், மிகவும் அருவருப்பான முறையிலும், கீழ்த்தரமாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளனர். நடிகர் விஜயகுமார், “தினமலர் அலுவலகத்திற்குச் சென்று நான்கு பேரை வெட்டி கூறு போடுவேன்’ என பேசியிருக்கிறார். பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தி பேசிய நடிகர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், அசதுல்லாவின் மனைவி நூர்ஜான், முருகநாதன், நிலாவேந்தன், வேலாயுதம், சென்மான், ஜெயவீரன், சரவணன் ஆகியோரும், தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே, சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அன்பழகன், இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அசதுல்லா, அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கம் சார்பில், சத்யாலயா ராமகிருஷ்ணன் ஆகியோர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
தொடர்ந்து நடந்த வழக்கில் நடிகர்–நடிகையர் நீதிமன்றத்திற்கு வரமால் இருந்தது: இதைத்தொடர்ந்து ஊட்டியை சேர்ந்த பத்திரிகையாளர் ரோசாரியோ மரியசூசை என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பத்திரிகையாளர்களுக்கு எதிரான கருத்துகள் என்றும், “தினமலர்’ இதழுக்கு எதிராகவும்[3], பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், பத்திரிகையாளர்கள் குடும்பத்தாரை கேவலப்படுத்தும் வகையிலும்[4], மற்றும் பத்திரிகையாளர்களை நடிகர்கள் தரக்குறைவாக பேசியதால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி ஊட்டியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 13.11.2009 அன்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்[5]. இந்த மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமூக ஆர்வலர்கள் வீரமதிவாணன் மற்றும் தவ முதல்வன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வந்தது[6]. வழக்கு விசாரணைக்கு ஆஜராக சரத்குமார், சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. அதனால், வழக்குப் போட்டவரும் விடுவதாக இல்லை போலும்.
சம்பந்தப்பட்ட 8 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி03.01.2012-ல் மனு தாக்கல் செய்தது: இந்த நிலையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 3.1.2012-ல் மனு தாக்கல் செய்தனர். தாங்கள் பேசியதையெல்லாம் மறந்து விட்டனரா அல்லது “வழக்கை ரத்து செய்யக்கோரும்” அளவிற்கு யாதாவது செய்துள்ளனரா, சமரசத்திற்கு சென்றுள்ளனரா என்றெல்லாம் தெரியவில்லை. இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, ஊட்டி கோர்ட்டில் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. பின்னர் இடைக்கால தடையை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது[7]. அதன்படி ஊட்டி கோர்ட்டில் இந்த வழக்கு 23-05-2017 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது[8]. அப்போது விசாரணைக்கு ஆஜராகாத நடிகர்கள் சரத் குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி செந்தில்குமார் ராஜவேலு உத்தரவு பிறப்பித்தார். தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்[9]. உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடிகர்களின் வழக்கறிஞர் விஸ்வநாத் மனு தாக்கல் செய்துள்ளார்[10].
சமுதாய பொறுப்பு [Social Responsibility]-லிருந்து நடிக-நடிகையர் தப்பித்துக் கொள்ள முடியாது: இவ்வழக்கு பத்திரிக்கையாளர்களுக்கும், நடிகர்-நடிகைகளுக்கும் இடையேயுள்ள பிரச்சினையா, நடிகர்-நடிகைகளுக்கு இடையேயுள்ள தொழில் போட்டியா, அவதூறா, இதனை 2009லிருந்து இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன, இடையில் இவர்கள் எல்லோருமே, தமிழக சமூகத்தின் மாண்பு, மேன்பு, கலாச்சாரம், பண்பாடு, முதலியவற்றைக் காப்பது போல, பட இடங்களில், மேடைகளில், நிகழ்ச்சிகளில் பேசியிருப்பதும், அறிவுரை கூறியதும், போன்றவற்றை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், அரசியலையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. அதே போல கடந்த 60 வருடங்களாக, சமூதாயம், குறிப்பாக பெண்கள் நிலை சீரழிந்து வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது. இன்றைக்கு சமுதாய பொறுப்பு [Social Responsibility] என்றேல்லாம் பேசப்பட்டு வருகின்றது. அந்நிலையிலஆ நூற்றுக்கணக்கில் காசு கொடுத்து சினிமா பார்க்கும் போது, படம் நன்றாக இருக்கின்றதா இல்லையா என்பதை விட, அவர்கள் சமூகப் பிரச்சினைகள் பற்றி பேச வந்துவிடுவதாலும், கருத்துகள் கூறூவதாலும், குறிப்பிட்ட விளம்பரங்களில், இந்த பொருள், சேவை … முதலியவற்றை வாங்குங்கள் என்று தூண்டும் நிலைக்கும் வந்து விட்டதால், அவர்கள் பேசுவது, நடந்து கொள்வது முதலியவஏற்றைப் பற்றி மற்றவர்களும் கண்காணிப்பது, விமர்சிப்பது என்பது இயல்பாகி விடுகின்ற நிலை ஏற்பட்டு விட்டது.
© வேதபிரகாஷ்
25-05-2017
[1] தினமலர், நடிகர், நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலும் 8 பேர் வழக்கு, அக்டோபர் 16,2009,00:00 IST.
[2] http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5301
[3] தினமலர், பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு:ஊட்டியில் டிச.,19ல் ஆஜராக நடிகர்களுக்கு சம்மன், பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2011,00:22 IST.
[4] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=354198
[5] தினமணி, பிடியாணை – ரத்து செய்ய நடிகர்கள் மனு!, மே.24, 2017. 03.33 pm
[6] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/may/24/arrest-warrants-against-popular-tamil-stars-2707960.html
[7] மாலைமுரசு, பத்திகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு !, May 24, 2017.
[8] http://www.malaimurasu.in/index.php/actors-speech/
[9] தினத்தந்தி, பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சூர்யா, சரத்குமார் மனு, மே 24, 2017, 03:43 PM.
[10] http://www.dailythanthi.com/News/TopNews/2017/05/24154344/Seek-to-cancel-the-watchman-Surya-Sarath-Kumar-petition.vpf