குறிப்பிட்ட பகுதியில் வயதான பெண்மணிகள் கொலை செய்யப் படுவது ஏன்?
கொள்ளை-கொலையாளர்களுக்கு எளிமையான, சாதாரணமான இலக்குகள்: வயதானவர்கள், குறிப்பாக பெண்கள் கொலை செய்யப்படுவது அதிகமாகி வருகிறது. குறிப்பிட்ட பகுதியில் இவ்வாறான கொலைகள் நடப்பது, இவர்கள் எல்லாம் கொள்ளை-கொலையாளர்களுக்கு எளிமையான, சாதாரணமான இலக்குகள் போல இருக்கிறது[1]. ஆகவே, அவர்களைத் தெரிந்தவர்கள், தெரிந்து கொண்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்தவர்கள், அறிந்து கொண்டவர்கள், அமைதியாக காரியத்தை செய்து மறைந்து விடுகிறார்கள். சில வழக்குகளில் கொலையாளிகள் பிடிபடுகிறார்கள், சில வழக்குகள் அமைதியாக மூடப்படுகின்றன. மேலும், இவர்களுக்கு என்று உறவினர்கள் யாரும் இல்லை அல்லது அவர்கள் கவனம் செல்லுத்துவது இல்லை, என்ற நிலை இருக்கும் போது, வழக்குகள் மூடப்பட்டாலும், கேட்பார் யாரும் இல்லாததால் மறக்கப்படும். கொலையானவர்களின் ஆத்மாக்கள் அமைதியாக ஆண்டவன் தான் வழி போல இருக்கிறது.
மேற்கு மாம்பலத்தில் தனியாக இருந்த இரண்டு பெண்களை கழுத்தை நெரித்து கொலை: மேற்கு மாம்பலத்தில் தனியாக இருந்த இரண்டு பெண்களை கழுத்தை நெரித்து கொன்று, நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, மேற்கு மாம்பலம், கோதண்டராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (75); இவரது தங்கை காமாட்சி (72). வயதான இருவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தத் தெருவில் குடியிருந்து வந்தனர்[2]. ஜெயலட்சுமிக்கு திருமணமாகி, கணவர் பிரிந்து சென்று விட்டார். காமாட்சி, கோல்கட்டாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி., வேதியியல் படித்து முடித்து, சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். இதன் மூலம் காமாட்சி, மாதம் 19 ஆயிரம் ரூபாய், பென்ஷன் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. காமாட்சிக்கு திருமணமாகவில்லை. திருமணமாகிய ஜெயலட்சுமியின் கணவர் பிரிந்து சென்றுவிட்டதாலும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாலும், காமாட்சியும், அவருடனேயே வாழ்ந்து வந்தார். இருவரும் இதற்கு முன், அதே பகுதியில் உள்ள தனபாலன் தெருவில் வசித்து வந்தனர்.
வேலைக்காரி கதவு தட்டி திறாக்காததால் சந்தேகப் பட்டு கதவு திறக்கப்பட்டது: இவர்களது வீட்டில், கன்னியம்மாள் என்ற பெண், கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வருகிறார். நேற்று கன்னியம்மாள், ஜெயலட்சுமியின் வீட்டிற்கு வந்து பணிகளை முடித்துச் சென்றுவிட்டார். பகல் 12 மணிக்கு வழக்கம் போல், பணிக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறம் பாதியளவு தாழிடப்பட்ட நிலையில் இருந்தது. கதவை யாரும் வலுக்கட்டாயமாக திறந்ததாகத் தெரியவில்லை[3]. கன்னியம்மாள் கூப்பிட்டும், யாரும் வந்து திறக்காததால், கதவைத் திறந்து உள்ளே சென்றார். அங்கு, உள் அறையில் ஜெயலட்சுமி, பேச்சு மூச்சற்ற நிலையில் கிடந்தார். உள்ளே சென்று பார்த்த போது, சமையலறையில் காமாட்சி, துண்டால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், கீழே கிடந்தார். உடனடியாக கன்னியம்மாள், அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அவர்கள் வந்து பார்த்த போது இருவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாரின் யூகங்கள், வழக்கு பதிவு முதலியன: அசோக்நகர் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீபன், ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் தலைமையில் போலீசார், சம்பவ இடம் வந்து, இருவரது உடல்களையும் பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜெயலட்சுமியின் கழுத்தில், தாலி அப்படியே இருந்தது. ஆனால், இருவரது உடலிலும் இருந்த மற்ற நகைகள் மாயமாகியுள்ளதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது[4]. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும், சிதறி கிடந்தன. அவர்கள் பட்டுப்புடவை, நகைகள் அணிந்து வெளியில் சென்று வருவர் என்று தெரிகிறது. இதை கவனித்து வந்தவர்கள் தொடர்ந்து வந்து வீட்டில் நுழைந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். ஒன்றிற்கு மேலான நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இரட்டை கொலை தொடர்பாக, தெற்கு மண்டல இணை கமிஷனர் பெரியய்யா, தி.நகர் துணை கமிஷனர் சண்முகவேல் ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
சில முன்னம் நடந்த கொலைகள்- ஐவரி டவர்ஸ், ஏரிக்கரைத் தெரு – ஒரு பெண் கொலை: ஏரிக்கரைத் தெருவில் உள்ள ஐவரி டவர்ஸ் என்ற அடுக்குமாடி வீட்டில் 7-8 வருடங்களுக்கு முன்பு, தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொலை செய்யப் பட்டார். உண்மையில் அவர் கொலை செய்யப்பட்டதே, இருநாட்கள் கடந்துதான் தெரிய வந்தது. அதுவும் பணம்-நகை-பொருளுக்காக நடந்த கொலை என்று சொல்லப் பட்டது.
2002ல் தி.நகர் ராகவையா தெருவில் மலர்க்கொடி (55) என்ற சித்த மருத்துவர் கொலை செய்யப்பட்டார்[5]: தனது வீட்டிலேயே மருத்துவ மனையை நடத்தி வரும் மலர்க்கொடி என்ற சித்தமருத்துவர் இதேபோல கொலை செய்யப் பட்டார். அதாயத்திற்கான கொலை என்று போலீஸாறர் வழக்கு பதிவு எய்தனர்.
2008 – எஸ். சரவணன் (74), அவரது மனைவி கஸ்தூரி (73), மற்றும் வீட்டு வேலைக்காரி இன்பரசி (17) கொலை: செப்டம்பர் 2009ல் சென்னை மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள் தாயையும், மகனையும் கொடூரமாகக் கொலை செய்து விட்டு நகைகளை திருடிக் கொண்டு தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர இரட்டைக் கொலை மற்றும் திருட்டு சென்னை நகர மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கொலை அப்பகுதியில் மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த வருடம் எஸ். சரவணன் (74), அவரது மனைவி கஸ்தூரி (73), மற்றும் வீட்டு வேலைக்காரி இன்பரசி (17) அசோக் நகர், நடேசன் சாலையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர்[6]. சமீப காலமாக சென்னை நகரில் ஆதாயத்திற்காக கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மேற்கு மாம்பலத்தில் இரட்டைக் கொலை நடந்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலம், போஸ்டல் காலனி 49-வது தெரு எப்-3 பிளாக்கில் வசிப்பவர் ராமசுப்பிரமணி (45). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், பெங்களூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் ஜெனரல் மானேஜராக பணியாற்றுகிறார்.
செப்டம்பர் 2009ல் மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள் தாயையும், மகனையும் கொடூரமாகக் கொலை: இவரது மனைவி பெயர் அனந்தலட்சுமி என்ற விஜயா (39). பிளஸ்-2 வரை படித்துவிட்டு இசையும் கற்றுள்ளார். வீட்டில் சிறுவர்-சிறுமிகளுக்கு இசையும் கற்றுக் கொடுப்பார். காதல் திருமண தம்பதிகளான இவர்களுக்கு ஷோபனா (19) என்ற மகளும், சூரஜ் (12) என்ற மகனும் உள்ளனர். ஷோபனா என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். சூரஜ் 8-ம் வகுப்பு மாணவன். ராமசுப்பிரமணி பெங்களூரிலேயே தங்கி உள்ளார். அனந்தலட்சுமி மகன், மகளோடு வீட்டில் தனியாக வசித்து வந்தார். வாரத்திற்கு ஒருமுறை, அல்லது மாதத்திற்கு 2 முறை ராமசுப்பிரமணி சென்னை வந்து மனைவி, குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வார்.
நேற்று முன்தினம் ஷோபனா வழக்கம்போல கல்லூரிக்கு போய்விட்டார். காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் சூரஜ் தாயார் அனந்தலட்சுமியோடு வீட்டில் இருந்தான். மாலை 5 மணியளவில் கல்லூரியில் இருந்து ஷோபனா வீட்டுக்கு வந்தார். வீடு பூட்டிக் கிடந்தது. கதவு பூட்டப்பட்டு வெளியே பூட்டு தொங்கியது. தாயாரும், தம்பியும் வெளியில் எங்காவது சென்றிருக்கலாம் என்று ஷோபனா நினைத்து வீட்டு வாசல் முன்பு காத்து இருந்து பார்த்தார். இவர்கள் வசிக்கும் வீடு கலா பிளாட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ளது. ஷோபனா பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் தாயாரும், தம்பியும் வெளியில் எங்காவது சென்றிருக்கிறார்களா என்று கேட்டார். வெளியில் எங்கும் போனதாக தெரியவில்லை என்று பக்கத்து வீட்டார் தெரிவித்தனர். உடனே தனது தாயாரின் செல்போனில் தொடர்புகொண்டு ஷோபனா பேச முயன்றார். செல்போன் `சுவிட்ச் ஆப்’ என்று பதில் அளித்தது. எங்காவது வெளியில் போய் இருப்பார்கள் என்று கருதிய ஷோபனா தனது தோழிகளின் வீட்டுக்கு போய்விட்டார்.
இரவு 9 மணி அளவில் ஷோபனா மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போதும் வீடு பூட்டிய நிலையில் இருந்தது. சுமார் 5 மணி நேரம் தவித்துப்போன ஷோபனா ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்று உணர ஆரம்பித்தார். கதவை தட்டிப் பார்த்தார். சத்தம் இல்லை. மீண்டும் தாயாரின் செல்போனுக்கு போன் செய்தார். அப்போதும் `சுவிட்ச் ஆப்’ என்றே பதில் வந்தது. இதனால் பயந்து போன ஷோபனா பக்கத்து வீட்டில் வசிக்கும் வார பத்திரிகை ஆசிரியரிடம் சென்று தனது தாயாரும், தம்பியும் காணவில்லை என்றும், வீடு வெளியில் பூட்டப்பட்டுள்ளது என்றும் கூறினார். உடனே வார பத்திரிகை ஆசிரியரும் வந்து கதவை தட்டிப் பார்த்தார். சத்தம் எதுவும் இல்லை. இதனால் அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அசோக்நகர் போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரும் வந்து கதவை தட்டிப் பார்த்தார்கள். பதில் இல்லை.
இதனால் வேறு வழியில்லாமல் கதவை உடைத்து போலீசார் வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டுக்குள் கண்ட காட்சி அனைவருடைய நெஞ்சையும் பதற வைத்தது. வீட்டின் படுக்கை அறையில் மல்லாந்த நிலையில் அனந்தலட்சுமி ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. உடலின் மற்ற பகுதிகளிலும் கத்தி குத்து காயங்கள் இருந்தன. சூரஜ் சமையல் அறையில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். வீட்டிற்குள் இருந்த பீரோவும் திறந்து அலங்கோலமாக கிடந்தது. அனந்தலட்சுமியின் பிணம் அருகே ரத்தம் படிந்த கத்திரிக்கோல் ஒன்று கிடந்தது. அந்த கத்திரிக்கோலால் தான் கொலையாளி அனந்தலட்சுமியையும், சூரஜையும் குத்தி சாய்த்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். தாயும், தம்பியும் படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் கோரகாட்சியை பார்த்து ஷோபனா கதறி அழுதார்.
பட்டப்பகலில் இந்தக் கொலை நடந்துள்ளது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தகவல் அறிந்து விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாய் ஸ்டெபி சீனிவாசா தியேட்டர் அருகில் வரை ஓடி நின்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. அனந்தலட்சுமியின் பிணமும், சூரஜின் பிணமும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்குள் கொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்டு நள்ளிரவுக்கு மேல் பெங்களூரில் இருந்து ராமசுப்பிரமணியும் காரில் சென்னைக்கு விரைந்து வந்தார். ஷோபனா, போனில் அம்மாவையும், தம்பியையும் காணவில்லை என்று தகவல் தெரிவித்ததாகவும், இதனால் இரவு 7 மணியளவில் காரில் புறப்பட்டு சென்னை வந்ததாகவும் ராமசுப்பிரமணி தெரிவித்தார்.
ஷோபனா அணிந்திருந்த 15 சவரன் நகைகள் மற்றும் ஒரு பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்னொரு பீரோவுக்குள் இருந்த 40 சவரன் நகைகள் அப்படியே இருந்தன. அனந்தலட்சுமி வீட்டில் தனியாக இருக்கும்போது யாராவது வெளியில் கதவை தட்டினால் எளிதில் கதவை திறக்க மாட்டாராம். கதவை தட்டுவது யார் என்று வீட்டுக்குள் இருந்தபடியே நன்கு விசாரித்தபிறகுதான் கதவை திறப்பாராம். கொலையாளி எளிதில் வீட்டுக்குள் நுழைந்து அக்கம்பக்கத்தினருக்கு சத்தம் கேட்காதவாறு காரியத்தை கச்சிதமாக முடித்து சென்றுள்ளான். இதை வைத்து பார்க்கும்போது கொலையாளி அனந்தலட்சுமிக்கு நன்கு தெரிந்த நபராக தான் இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.